உலகக் கோப்பை தோல்வி தற்போது வரை வலிப்பதாக இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் வேதனையுடன் x தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
உலகக் கோப்பை முதல் லீக் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்றும், 3 வது முறையாக இந்திய அணியின் வசம் உலகக் கோப்பை வரும் என்று ரசிர்கள் காத்திருக்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயம் நொறுங்கும் வண்ணம் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்திய அணி.
அதன்படி, நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6-விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 6 வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா என்ற பெருமையை பெற்றது.
இந்திய வீரர்கள் சோகத்தில் மூழ்க ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் கண்கலங்கினார்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த தோல்வியில் இருந்த மீளாத கே.எல். ராகுல் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, இன்னும் வலிக்கிறது என்று கூறியுள்ள அவர் இதயம் நொறுங்கும் எமோஜியை பகிர்ந்துள்ளார். தற்போது கே.எல்.ராகுலின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர்” வருத்தப்பட வேண்டாம். இந்த முறை நீங்கள் அனைவரும் நன்றாக விளையாடி உள்ளீர்கள்” என்றும், “எப்போதும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்” என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.